33 % இடஒதுக்கீடு....

on Thursday, August 18, 2011


மகளிர் தின பரிசாக, மசோதா நிறைவேறுமா ?
இந்திய ஜனாதிபதி... 'பிரதீபா பாட்டீல்', மக்களவை சபாநாயகர்... 'மீரா குமார்', ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர்... 'சோனியா காந்தி', நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... 'சுஷ்மா சுவராஜ்' என ஆட்சியிலும் அதிகாரத்திலும் மிக முக்கிய பொறுப்புகளை தலைமையேற்று நடத்திக் கொண்டிருப்பவர்கள் பெண் ஆளுமைகள்.
60 ஆண்டுகால இந்திய ஜனநாயகத்தின் நெடிய பாதையில் இந்த அரும்பெரும் மாற்றம் சட்டென நிகழ்ந்ததல்ல. பல நூறு எதிர்ப்பு முட்கள் குத்திய வலியின் பலனாகக் கிடத்தவை. இந்த மாற்றங்களின் அணிவரிசையில், கிரீடமாக வந்திருக்கிறது... 14 வருடங்கள் பலத்த எதிர்ப்பைக் கண்டு துவளாத 'பெண்கள் இடஒதுக்கீடு மசோதா'. அண்மையில் மத்திய மந்திரி சபை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்தகட்டமாக நிறைவேற வேண்டும். அது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு இங்கே பேசுகிறார்கள் இருவர்!
பாலபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்.
''பெண்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார உரிமையை முன்னெடுத்துத் தரும் பெரும் முயற்சி இந்த ஒப்புதல். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்களின் வாக்களிக்கும் உரிமை யையே ஒரு மைல்கல்லாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த பெருங்கனவு நனவாகப் போவதை சந்தோஷம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி விட முடியாது. இது, அரசியலில் ஆணுக்கு சமமாகப் பெண்கள் பங்கேற்கக் கிடைத்த அரசியல் உரிமை.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பங்கேற்றுக் கொண்டுஇருக்கிறார்கள் நம் சகோதரிகள். ஆண்டாண்டு காலமாக அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் உள்ளாட்சிக்குள் வந்தபோது ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்கள். 'பஞ்சாயத்து - உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களை இயக்குவது ஆண்கள்தான்' என்ற விமர்சனம் இருந்தது. ஆனால், இன்று தன்னந்தனியாகவும் திறமையாகவும் பெண்கள் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாடாளுமன்றத்திலும் அந்த நிலை வரவேண்டும். எனவே, 'இந்த 33% இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும்' என்று எதிர்ப்பைக் காட்டாமல் இந்த கூட்டத் தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக நிறைவேறும்!"
காயத்ரிதேவி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்.
''பழமைவாத சிந்தனை கொண்டவர்கள் என்று கருதப்படும் பாகிஸ்தானில்கூட 21.3% பெண்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கு ஓட்டு உரிமை மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் பெண்கள் அரசியல் அதிகாரத்துக்கு வந்த பின்புதான் அந்நாடு, உலகின் வளர்சியில் 25-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கு வெறும் 10.8% என்ற அளவில்தான் நாடாளுமன்றத்தில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதன்முதலாக 1995-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போதிருந்தே எதிர்ப்புகளைச் சம்பாதித்து வருகிறது. தேவ கௌடா ஆட்சின்போது (1999) சமாஜ்வாடி எம்.பி. ஒருவர் இந்த மசோதாவைக் கிழித்துப் போட்டார். 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, ஒரு வருடமாக அக்குழு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் நிலைக்குழு சேர்மன் ஜெயந்தி நடராஜன், குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டார். இப்போது மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் கிடைத்திருக்கிறது. கூடியவிரைவில் இது நாடாளு மன்றத்திலும் உறுதியாக நிறைவேற்றப்படும்."
இந்த ஆண்டு மகளிர் தின (மார்ச் - 8) பரிசாக மசோதா நிறைவேறினால்... இரட்டிப்பு மகிழ்ச்சிதான்!
- நாச்சியாள்

0 கருத்துரைகள்:

Post a Comment