இணணபிரிந்த தோழிகள்..?

on Wednesday, January 4, 2012
இணணபிரிந்த தோழிகள்..?

நாச்சியாள்

வரலாற்றில் சில எதிர்பாராத நிகழ்வுகள் நம் கண்முன் நடந்தேறும்போது, அதனை நம்புவது மிகக் கடினமாக இருக்கும். அப்படித்தான் நம்பமுடியாத, அதிர்ச்சியான நிகழ்வாக இருக்கிறது... 30 ஆண்டுகளாக நீடித்திருந்த உடன்பிறவா சகோதரிகளான தமிழக முதல்வர் ஜெயலலிதா - சசிகலாவின் பிரிவு. அதைப் பற்றிய தங்களின் பார்வையை இங்கே பதிவு செய் கிறார்கள், அரசியல் இயக்க ஆளுமைகள் சிலர்.
டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், (மாநிலத் துணைத் தலைவர்- பி.ஜே.பி.): ''அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நாடா, நட்பா என்ற கேள்வி எழுந்தபோது... நட்பைத் தியாகம் செய்திருக்கிறார் நம் முதல்வர். ஜெயலலிதாவுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நடந்த சில அதிர்ச்சி நிகழ்வுகள் இந்த முடிவுக்குக் காரண மாகியிருக்கிறது. கால் நூற்றாண்டாக இறுகியிருந்த நட்பை கணப் பொழுதில் பிரிவதற்கு, அசாத்திய மனபலம் தேவை. அதை ஜெயலலிதா பெற்றுள்ளார் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார். அதேவேளையில் இவர்களின் முப்பதாண்டுகால நட்பு பரிசுத்தமானதாக இருந்தால், மீண்டும் துளிர்க்கட்டும். அந்த நட்பு அரசியலில் எல்லை தாண்டி விளையாடியிருந்தால், சசிகலா இந்த இழப்புக்கு உரியவர்தான்.''
சுப்புலட்சுமி, (முன்னாள் அமைச்சர் - தி.மு.க.): ''இந்த 30 வருடத் தோழமை யில், நட்பை மட்டுமே ஆதாயமாக நினைத்திருந்தால், இந்தப் பிரிவு நிகழ்ந்து இருக்காது. ஆனால், அந்த நட்பு, அரசியலில் எல்லா மட்டங்களையும், அந்தக் கட்சித் தொண்டர்களையும்கூட அச்சுறுத்தும் விஷயமாக மாறிப்போன போது தான்... 'இந்த நட்பு உடையாதா?’ என்று பலரும் குமுறிக் கொண்டிருந்தார்கள். தோழியின் வட்டத்தில் மட்டும் நிற்காமல், தன்னைச் சார்ந்த அத்தனை உறவு களையும் கட்சியின் மேல் மட்டத்திலிருந்து அடிமட்ட நிர்வாகம் வரைக்கும் ஊடுருவச் செய்து, அதன் மூலம் கட்சிக்கு அவப் பெயரை சசிகலா ஏற்படுத்த, அதற்கு ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு இது. காலம்தான் பதில் சொல்லும்... இந்தப் பிரிவின் ஆயுள் என்ன, இதனால் நன்மை விளையுமா, இல்லையா என்று!''
உ. வாசுகி (செயலாளர் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்): ''அ.தி.மு.க- வினரே ஸ்வீட் கொடுத்தும் மொட்டை அடித்தும் இதைக் கொண்டாடி இருக் கிறார்கள் என்றால்... அதை அவர்கள் எத்தனையோ காலமாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள் என்றுதானே அர்த்தம். அதற்குக் காரணம், அங்கு உள்கட்சி ஜனநாயகம் உருவாவதைத் தடுக்கும் சக்தியாக சசிகலா இருந்திருக்கிறார். சசிகலாவின் உறவினர்கள் யாரும் கட்சியில் அமைச்சர், செயலாளர், பொரு ளாளர் என எந்த 'கீ போஸ்ட்’டிலும் இல்லை. ஆனால்... வட்டம், மாவட்டம் என எல்லா மட்டங்களிலும் 'கீ ரோல்’ செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான முரண். இத்தனை நாள் இவர்களின் தலையீடு அரசி யலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் இருந்ததே, அவர்கள் மக்களுக்குச் செய்த துரோகம். அது முதல்வருக்குத் தெரியாமலா நடந்திருக்கும்? இது மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், பாராட்டப்பட வேண்டிய முடிவு!''

0 கருத்துரைகள்:

Post a Comment