நோய்களின் தேசமாகும் இந்தியா...!

on Thursday, August 18, 2011





தப்பிக்க வழிசொல்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர்
ஏப்ரல் - 7, உலக சுகாதார தினம்...
அன்றைய தினம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வெளியான பல்வேறு நோய்களுக்கான 'ஸ்பெஷல் மருத்துவ மனைகள்'பற்றிய விளம்பரங்களோடு இடம்பெற்ற சில கட்டுரைகளை ஊன்றிப் படித்தபோது... 'பகீர்'என்றிருந்தது நமக்கு! சர்க்கரை நோய், உடல்பருமன், இதய நோய் என்று உலகத் தர வரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள நோய்கள் பலவற்றிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக் கிறது இந்தியா எனும் செய்தியைப் படித்த பிறகு பதறாமல் எப்படி இருக்க முடியும்?
"நமக்கு மட்டும் ஏன் இப்படி? எதனால் இந்த ஆரோக்கிய பாதிப்பு? இதிலிருந்து மீண்டு வர வழிகளே இல்லையா?''மனதை அழுத்தும் கேள்விகளைச் சுமந்தபடி, மத்திய சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸைச் சந்தித்தோம்.
கேள்விகளை அழுத்தமான மௌனத்துடன் உள்வாங்கிக் கொண்டவர், பேச ஆரம்பித்தார்.
"சுகாதாரமின்மை, மக்கள்தொகைப் பெருக்கம் இதை மட்டுமே இந்த நிலைக்குக் காரணங்களாகச் சொல்ல முடியாது. அரசாங்கங்கள் பின்பற்றும் சுகாதாரக் கொள்கைகளும்தான் காரணம். இதுவரை நாம் கடைபிடித்துக் கொண்டிருப்பது... காலரா, நிமோனியா என்று நோய்கள் வந்த பிறகு, குணப்படுத்துவதற்காக போராடும் 'க்யூரேட்டிவ் பாலிசி (Curative health policy) மட்டுமே! முன்கூட்டியே தடுக்கக்கூடிய பாலிசி (Preventive and promotive health policy) நம்மிடம் இல்லை என்பதுதான் இந்தப் பிரச்னைகளின் ஆணிவேர்.
ஆண்டுக்கு 10 லட்சம் பேர் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இறக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக இருப்பது... சாராயம்-மது! இந்தப் பழக்கங்கள் பல நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன. பல குடும்பங்களை அநாதைகள் ஆக்குகின்றன. இருந்தாலும், இதைஎல்லாம் தடுக்கவும், நிராகரிக்கவும் கொள்கைகள் நம்மிடம் இல்லையே?
இந்த விஷயங்களையெல்லாம் ஆராய்ந்துதான் 'தேசிய ஆல்கஹால் கொள்கை(National alcohol policy), தேசிய பள்ளிக்கூட சுகாதார திட்டம் (National school health programme) எல்லாம் நான் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தேன். ஆனால், அதெல்லாம் இன்று எங்கு போனது என்று தெரியவில்லை''என்று நொந்துகொண்டவர்,
''மது அருந்தத் தொடங்குபவர்களின் வயது 50 வருடங்களுக்கு முன்பு 28 என்ற அளவில் இருந்தது. காலப்போக்கில் 19 எனக் குறைந்து, இன்றைக்கு பதின்மூன்றரை வயது என்றாகியிருக்கிறது! பதின் மூன்றரை வயதில் ஆரம்பித்து, இருபது வருடங்கள் வரை ஒருவன் குடியைத் தொடர்ந்தால்... 34, 35 வயதில் கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பாகப் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து விடுவான். 25 முதல் 40 வயது வரைதான் ஒரு மனிதன் அதிகமாக உழைக்கும் காலம். அந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டால்... அவனை நம்பியிருக்கும் மனைவி, மக்கள் என்னாவார்கள்... நாடு என்னவாகும்?''என்று நியாயமான கேள்வியை எழுப்பினார் அன்புமணி.
சில நிமிட அமைதிக்குப் பிறகு, "நீரிழிவு நோயில் உலக அளவில் இரண்டாவது இடம் நமக்கு. இன்று 3 கோடி இந்தியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது, 2015-ம் ஆண்டில் 8 கோடியாக உயர்ந்துவிடும் என்கிறார்கள். இதை, ‘அனைத்து நோய்களின் அன்னை’ என்பார்கள். இது நம்மைத் தொட்டு விட்டால்... உயர் ரத்த அழுத்தம், இதய நோய் என ஒவ்வொன்றாக வரிசை கட்டி வரும் என்பதுதான் கொடுமை. 'உடல் உழைப்பு இல்லாமல் சொகுசாக வாழ வேண்டும்'என்ற மனோபாவத்துக்கு வந்துவிட்டதுதான் காரணம்.
சாப்பாட்டு முறைகள் மாறிவிட்டன. பண்டிகை காலங்களில் மட்டும் பலகாரங்கள் சாப்பிட்டு வளர்ந்த காலம் போய், இப்போது அதுவே தினசரி உணவாகிவிட்டது. ஜங்க் ஃபுட் எனும் குப்பை உணவுகள் நம்மை மீறி, நம் வரவேற்பறை, சமையல் அறை முழுக்க ஆக்கிரமித்து விட்டன. ஜங்க் ஃபுட், குளிர்பானங்கள் எல்லாவற்றிலும் இருப்பது நம் உடலுக்கு தேவைப்படாத சர்க்கரை, கொழுப்பு, வேதிப்பொருட்கள்தான் என்பதை நாம் உணரத் தவறுகிறோம்.
இன்று, 8 வயது குழந்தை சர்வசாதரணமாக அரை லிட்டர் குளிர்பானத்தைக் குடிக்கிறது. பெற்றோரும், ‘ஐயோ, என் குழந்தை ஆசைப்பட்டுக் கேட்கிறது’ என்று வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். அரை லிட்டர் குளிர்பானமும், 200 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸ§ம் சாப்பிடுகிற குழந்தையை, அந்த சக்தி வெளியேறும் அளவுக்கு நாம் விளையாட விடுகிறோமா... இல்லையோ! விளைவு, ‘ஒபிஸிட்டி’ எனும் உடல் பருமன் நோயிலும் இந்தியாவுக்கு இரண்டாமிடம். அதன் காரணமாக 22 வயது இளைஞனுக்கு ஹார்ட் அட்டாக். இதய சம்பந்தமான நோய்களில் உலகில் மூன்றாவது இடம் நமக்கு''என்று அதிர வைத்தவர்,
''இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் தடுக்க, மூன்று குழந்தைகளின் அப்பாவாக... ஒரு மருத்துவராக.. நான் சொல்லும் வழிமுறைகள்... குழந்தைகளுக்கு அதிகம் ஜங்க் ஃபுட், குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். குழந்தைகளை நிறைய நேரம் ஓடி ஆடி விளையாட அனுமதியுங்கள். ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடாமல், ஒரு நாளைக்கு 4-5 முறை கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இது உடல், மன ஆரோக்கியத்துக்கு கியாரண்டி.
ஒரு முன்னாள் அமைச்சராக வேண்டுவது.. மது, சிகரெட் பயன்பாட்டை ஒழிக்கும் திட்டங்களை வரவேற்க வேண்டும். பள்ளியில் ஆரோக்கிய பாடங்களை உருவாக்க வேண்டும். சுகாதாரக்கேட்டின் ஆரம்பப்புள்ளி கழிவறைகள் இல்லாததுதான். அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். எங்கும் பசுமையான சுற்றுச்சூழலை அமைக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்... உலகத் தர வரிசை நோய்கள் பட்டியலில் இந்தியாவின் இடம் மெள்ள பின்னோக்கித் தள்ளப்படுவது உறுதி!''என்று அழுத்தமாகச் சொன்னார்.
என்ன செய்யப்போகிறோம்?!

0 கருத்துரைகள்:

Post a Comment