ஏற்றம் தந்த ஏணிகள் ! நாச்சியாள் படம்: ச.இரா.ஸ்ரீதர்

on Wednesday, October 12, 2011

நினைத்த இலக்கை அடைய, வெற்றி தாகத்துடன் கல்லையும் முள்ளையும் மிதித்துக் கொண்டு ஓடும்போது, அந்த வழித்தடத்தில் நம்பிக்கை உரத்தைத் தெளித்துக் கொடுத்து, உடன் இருந்த ஏணிகள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உண்டு. லட்சியத்தை பெரும் வெற்றியாகச் சுவைத்த பின்பும், ஏணிகளை மறக்காமல் இருக்கும் மனிதர்களும் உண்டு. தங்களின் 'ஏணிகள்’ பற்றிப் பகிர்கிறார்கள் இந்த வெற்றியாளர்கள்!

நா.முத்துக்குமார் (திரைப்பட பாடலாசிரியர்): ''நம்மின் வளர்ச்சிக்கு நீரூற்றினவர்கள் நம் சொந்த பந்தங்களைவிட, நம் தாகத்தையும் அதை நோக்கி ஓடும் நம் ஓட்டத்தையும் புரிந்து கொண்ட ரத்த சம்பந்தமில்லாத உறவுகள்தான். அவர்கள்தான் கதகதப்பான ஓர் அரவணைப்பில் நம்மை உயர்த்தியிருப்பார்கள்; உத்வேகத்தைக் கொடுத்திருப்பார்கள். அந்த உத்வேகத்தை எனக்குக் கொடுத்து, என் எழுத்துக்களையும் கவிதைகளையும் ரசித்து, எனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, அதற்கு ஓயாமல் தீனி போட்டவர்... 'காஞ்சிபுரம் இலக்கிய வட்டம்’ வே. நாராயணன்.
நிறைய வாசிக்கும் பழக்கத்தை என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தாலும்... தீவிர வாசிப்பும், விவாதமும் நல்ல படைப்பை அள்ளிக் கொடுக்கும் என்ற அற்புதமான பாடத்தை எந்தக் கட்டணமும் இல்லாமல் கற்றுக் கொடுத்தவர் நாராயணன். இவ்வுலகை விட்டு மறைந்தாலும், இன்றும் வழிநடத்தும் 'காட்ஃபாதர்’ அவர்தான்!''
பாண்டிராஜ் (இயக்குநர்): ''என்னை 'இயக்குநர்’ பாண்டிராஜ் என்று உயர்த்திவிட்ட கைகள் நிறைய. ஆனா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம, 'டேய் பாண்டி... நீ ஜெயிக்கணும்டா!’னு வார்த்தையால சொல்லாம, அன்பால அரவணைச்சு, எனக்குப் பல சமயங்கள்ல அன்னமிட்டவர்... என் நண்பர் அருணாசலம். இப்போ சென்னையில மெஸ் வெச்சு நடத்திட்டு இருக்கார். என்கூட ஏழாவது வரைக்கும் எங்க ஊரு ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவர். அப்புறம் அவர் வேற ஸ்கூலுக்கும், ஊருக்கும் போன பின்னும், ஒரு பொங்கல் அப்போ வாழ்த்து அட்டை மூலமா எங்க நட்பை உயிர்ப்பிச்சார்.
சென்னையில நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த நாட்கள்ல, நானே சமைச்சு சாப்பிடுவேன். ஹோட்டல்ல சாப்பிட்டா நிறைய செலவாகுமே. அப்போ எல்லாம் நான் இல்லாத சமயங்கள்ல என் ரூமுக்கு வந்து அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறினு வாங்கி வெச்சுட்டு போயிடுவார் அருணாசலம். அவராலதான் நான் பலநாள் பட்டினியில்லாம சாப்பிட்டு இருக்கேன். படம் பண்ணும் முயற்சியிலயும் தேடல்லயும் சோர்ந்து போனப்போ, 'இன்னும் கொஞ்ச தூரம்தான்’னு சொல்லிச் சொல்லி என் சோகங்களை நம்பிக்கை யோட கடக்க வெச்சவர், இப்பவும் கடக்க வெச்சுட்டு இருக்கிறவர். அதுக்குப் பிரதிபலனா என்கிட்ட எதையும் எதிர் பார்க்காதவர். இதுக்கு ஈடா திருப்பித்தர என்கிட்ட எதுவும் இல்ல... அன்பைத் தவிர!''
விமல் (நடிகர்): ''சுபாஷ், இந்துமகான்னு என்னுடைய ரெண்டு நண்பர்கள்தான் எனக்கு தைரிய டானிக் தர்றவங்க. 'கூத்துப்பட்டறை’யில நான் நடிப்பு கத்துக்கிட்டு இருந்த காலகட்டத்துல இருந்து, நடிகனா வளர்ந்த பிறகும் என்னை செதுக்குற அன்பான சிற்பிகள். நமக்கு நடிப்பு வருமா, நாம இந்த இண்டஸ்ட்ரியில தாக்குப் பிடிச்சு நின்னுடுவோமானு மனசுக்குள்ள கலவரமா கலங்கி நிற்கும்போது எல்லாம், 'டே... நீ ஜெயிக்காட்டா, வேறு யாருடா ஜெயிப்பா?!’னு திரும்பத் திரும்ப சொல்லி சொல்லி என்னை உயர வெச்சவங்க, வெச்சுட்டு இருக்கிறவங்க. நன்றிங்கிற ஒரு வார்த்தையில அந்த எதிர்பார்ப்பில்லாத நேசத்தையும் பாசத்தையும் ஈடு செஞ்சுட முடியாது. அதுதான் ஏணிகளோட மகத்துவம்!''
சிவகார்த்திகேயன் (சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்): ''இன்னிக்கு டி.வி-யில கலக்குற நான், படிச்சு முடிச்சதும் 'கலக்கப்போவது யாரு?’ ஷோவுல கலந்துக்கிட்டப்போ, 'டி.வி-யில என்னப்பா பெரிய எதிர்காலம் இருக்கப் போகுது..?’னு சிலர் 'கருத்து’ சொன்னாங்க. என்னோட பெரிய சொத்தே டைமிங் பேச்சுதாங்கறதால, அதை வெச்சு சின்னத்திரையில இடம்பிடிச்சுடலாம்னு இறங்கினேன். அந்த 'கருத்து’ கந்தசாமிகள் கலங்க வெச்சாங்க.
குழம்பிப் போய், 'சரி... மாச சம்பளத்துக்கு வேலைக்குப் போயிடலாம்’னு முடிவெடுத்துட்டேன். அந்த நேரத்துல, 'நீ தப்பான முடிவு எடுத்து இருக்க...’னு எனக்குச் சரியா சுட்டிக் காட்டினவங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கோகுல், ஐயப்பன், நவநீதன், அருள்ராஜானு இவங்க நாலுபேரும்தான். தினமும் என்கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து, உற்சாகப்படுத்துவாங்க. பண உதவியைவிட, கூடவே நின்னு மனபலம் கொடுக்க சிலரால்தான் முடியும். இவங்க நாலு பேரு மட்டும் அந்த அளவுக்கு தைரியப்படுத்தலேனா, இன்னிக்கு எங்காச்சும் மாச சம்பளத்துக்கு வேலை பார்த்துட்டு இருந்திருப்பேன்!''
பின்குறிப்பு: 'அன்பும் நட்பும் விளம்பரத்துக்கு அல்ல’ என்று புகைப்படத்துக்கு மறுத்துவிட்டார்கள் இந்த ஏணிகள்!
இந்தத் தீபாவளியில் நாமும் நம் ஏணிகளுக்கு ஒரு வணக்கம் சொல்லி, வாழ்த்துப் பெறலாமே..!

Thanks:Aval vikatan

1 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

இது போல் அவரவர் வாழ்விலும் நிறைய பேர் இருப்பார்கள், ஆனால் நாம் இன்னும் முதுகில் குத்தியவர்கலையே நினைத்து கொண்டிருப்போம்..

Post a Comment