மேக்கப்...அடிமைத்தனத்தின் அடையாளமா? -பொறி பறக்கும் புது விவாதம் !

on Monday, December 5, 2011

நாச்சியாள்

''தேவதையைக் கண்டேன் எதிர்வீட்டு மாடியில். இயல்பாய் நின்று கொண்டிருந்தது. பின்பு அரை இன்ச்சுக்கு மேக்கப் அப்பி மாறுவேடமிட்டு வந்தது!''
- சமூக வலைதளமான ட்விட்டரில், சமீபத்திய ஹிட் 'ட்வீட்’ இது.
பெண்களின் அலங்காரம் குறித்து, உண்மையில் இதுதான் அதிகபட்ச இந்திய ஆண்களின்... குறிப்பாக, தமிழ்நாட்டு ஆண்களின் மனவிலாசம்!
முன்பெல்லாம் அதிகபட்சமாக ஃபேர்னெஸ் க்ரீம்கள் மட்டுமே நம் வீட்டுப் பெண்கள் அறிந்த மேக்கப். இப்போது காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவருமே... கொஞ்சம் ஃபவுண்டேஷன், லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என்று மேக்கப் போட்டுக்கொள்வது அதிகரித்து வருகிறது.
''மேக்கப் போட்டுக் கொள்வதால் ஐ ஃபீல் கான்ஃபிடென்ட் அண்ட் பியூட்டிஃபுல். வாட்ஸ் ராங் இன் இட்?''
- இது அவர்களின் கேள்வியாக இருக்கிறது.
மேக்கப் என்பது, ஒரு பெண்ணின் தனிப்பட்ட ரசனை, விருப்பம். என்றாலும், அதை இன்று பெரு வணிகமாக்கியிருக்கிறது வியாபார யுக்தி. 'மேக்கப்தான் தன்னம்பிக்கை’ என்று அவர்கள் உருவாக்கும் மாயத் தோற்றத்தால், மேக்கப் இல்லாத பெண்களிடம் அவர்கள் திணிக்கும் தாழ்வு மனப்பான்மையை எப்படிக் களைய..?
'ஸ்டைலிஷ் மேக்கப் அவசியமா? உண்மையில் அது தன்னம்பிக்கை, வெற்றி, பாராட்டு எல்லாம் அள்ளித் தருமா..?’ என்கிற கேள்வியை பெண் வி.ஐ.பி-க்கள் சிலரிடம் முன் வைத்தோம்.
சென்னை எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா... ''அழகியல் உணர்வு என்பது நாகரிகத்தின் வெளிப்பாடு. அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது மிகமுக்கியம். லிப்ஸ்டிக்கும், ஃபவுண்டேஷனும்தான் நாம் நாகரிகமானவர்கள் என்பதைக் காட்டும் என்கிற புரிதல் தவறானது. இது, இன்றைய தலைமுறை... தொழில்நுட்பத்துக்கும், நாகரிகத்துக்கும் இடையிலான வேறுபாட்டை குழப்பிக் கொள்வதால் வருகிற வினை.
உலகமயமாக்கலுக்குப் பின்னரும், இந்தியப் பெண்கள் உலக அழகிகளாக 'ஆக்கப்பட்ட’ பின்னரும்தான் மேக்கப் குறித்து நம் பெண்கள் அதிகம் கவலைப்பட ஆரம்பித்தார்கள். உருவாக்கப்பட்ட இந்த கவலைக்கும், மேக்கப் ஆசைக்கும் பின்னால் பல காஸ்மெடிக் வியாபார நிறுவனங்களின் நுண்ணரசியலும், வியாபார தந்திரமும் இருக்கிறது என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்..?'' என்று கேட்டார் பர்வீன்.
''ஒரு பெண் அதிகாரியை அவர் போட்டிருக்கும் மேக்கப், அறிவாளியாகவும் திறமைசாலியாகவும் மற்றவர்களுக்குக் காட்டுமா?'' என்ற கேள்வியை, முன்னாள் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி சிவகாமியிடம் கேட்டபோது... ''நாம் யாராக இருந்தாலும், ஒருவர் நம்மைப் பார்க்கும்போது ஃபிரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பது அவசியம். அழகாகக் காட்ட வேண்டும் என்கிற அவசியம் இல்லையே? நம் திறமையை நிர்ணயிக்கும் விஷயங்கள்... நம் அறிவு, சமயோஜித புத்தி, அனுபவம், ஒரு விஷயம் குறித்து அழமான புரிதல் போன்றவைதானே தவிர... முகச்சாயங்கள் அல்ல'' என்றார் அழுத்தமாக.
''கார்ப்பரேட் இண்டஸ்ட்ரியில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்கும், ஜெயிப்பதற்கும் மேக்கப் பிரதான காரணம் என்கிற  புரிதல் இருக்கிறதே..?'' என்ற கேள்வியை, தனியார் வங்கியின் உயர் அதிகாரி, பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கரிடம் வைத்தோம்.
''நம் நேர்த்தியான உடை, சீரான தலைமுடி, பொலிவான முகம் இவை எல்லாம் மிக முக்கியமான விஷயம் என்பது உண்மை. ஆனால், அலாதியான முகப் பொலிவுக்காகச் செய்யப்படும் எக்ஸ்ட்ரா மேக்கப், கார்ப்பரேட் இண்டஸ்ட்ரியை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... எந்தத் துறையைச் சார்ந்த பெண்களுக்கும் கைகொடுக்காது. மேக்கப் தன்னம்பிக்கையைத் தரும் என்பது, அபத்தம். வேலையில் நம் திறமையை அழகாகவும் கம்பீரமாகவும் 'பிரசன்ட்’ பண்ணினால் மட்டுமே வெற்றியை தக்க வைக்க முடியும்.
அலுவல் சம்பந்தமாக நான் சந்திக்கும் உயர்பதவியில் இருக்கும் பெண்கள் எல்லாம், மிக எளிமையாகத்தான் இருக்கிறார்கள். உதாரணமாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் டெபுடி கவர்னர் உஷா தாரட், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சார் என உயரிய பதவியில் இருப்பவர்கள் யாரும், எந்த மேக்கப்பும் இல்லாமல்  எளிமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் உலகப் புகழுக்குக் காரணம் உழைப்பும் திறமையும்தானே?'' என்று பகிர்ந்தார் பாரதி.
''ரிசப்ஷனிஸ்ட், வியாபார பிரதிநிதிகள், சேல்ஸ் கேர்ள்ஸ் இவர்களெல்லாம் தங்கள் வேலையின் பொருட்டு மேக்கப் தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்கிறார்களே..?'' கேள்வியை முடிக்கும் முன்னே,
''அழகு என்பது ஒவ்வொரு உயிரிக்குள்ளும் இருக்கும் இயற்கை. எல்லா மனிதர்களிடத்திலும் ஏதோ ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது. அதை உணரும் மனப்பாங்கு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்கிற இடத்தில்தான், மேக்கப் இவர்களுக்கு அவசியம் என்ற நிலை ஏற்படுகிறது. ஒரு வாடிக்கையாளரைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர்... வாடிக்கையாளர் தன்னைக் கவனிக்கும்படி இருப்பதற்குக் காரணம் தவறான சமூகப் புரிதலே. பெரியார் சொன்னதுபோல், 'ஆணோ பெண்ணோ ரம்மியமாக இருக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்பதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன்'' என்று பதிலை உதிர்த்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி.
''ஒரு பெண் செக்ஸுவலி ஆக்டிவா இருக்கிறாள் என்பதற்கான சிக்னல்தான் மேக்கப். அவள் ஓவலேஷன் எனப்படும் சூட்டில் இருக்கும்போது, அவளுடைய உடலில் ஏற்படும் ஃபிஸிக்கல் மாற்றம்தான் அதீத மேக்கப்புக்கு அடிப்படை'' என்றொரு கருத்தை, சமீபத்தில் விஜய் டி.வி. 'நீயா... நானா' நிகழ்ச்சியில் எடுத்து வைத்து, பலரையும் அதிர வைத்திருக்கும் மனநல மருத்துவர் ஷாலினி நினைப்பது என்ன?
''இயற்கையாகவே ஓர் ஆணுக்கு எல்லா விஷயத்தையும் மிகைப்படுத்திக்காட்ட வேண்டும். அந்த சூப்பர் நார்மல் ஃபீலைக் கொண்டு வருவதற்காகவே இன்று மேக்கப் அவசியமாகிவிட்டது. 'உனக்கு நான் சூப்பர் நார்மல் எஃபெக்டைக் கொடுத்துவிட்டேன். அதற்குப் பதிலாக இந்த வேலையை நீ முடித்துக் கொடு’ என்று வேகமாக வளர்ந்துவரும் இன்றைய வியாபார உலகத்தின் 'கிவ் அண்ட் டேக்’ மனப்பான்மை, மேக்கப் அவசியம் என்கிற மாயபிம்பத்தை உருவாக்குகிறது'' என்று எச்சரிக்கும் டாக்டர் ஷாலினி,
''இப்படி மேக்கப் போட்டு, மற்றவர்களை கவர்வதன் மூலமாக, பெண் இன்னும் அடிமையாக இருக்கிறாள் என்பதைத்தானே திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோம். அழகு என்பது நம்மில் இருக்கும் விஷயம். அதை எந்த விலை பொருளாலும் அதிகரிக்கவோ, அதீதமாக உணர வைக்கவோ முடியாது. இந்த உண்மையை இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் உறுதியாக.
சட்டென்று தீர்ப்பு சொல்லக்கூடிய பட்டிமன்றமா இது? ஆனால் ஒன்று, அழகு என்பது அகம்தான்! தன்னம்பிக்கை தருவது திறமைதான்!

Thanks to Aval vikatan.

0 கருத்துரைகள்:

Post a Comment