'ஒருவர்'வாழும் ஆலயத்துக்கு ஒரு நாளும் ஆபத்தில்லை !

on Wednesday, August 31, 2011

ஊர் கூடி உறவில் சேர்த்துவைக்க, 'நீதான் எனக்கு இனி எல்லாம்' என்று குடும்ப வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் அழகாக வாசற்கால் வைக்கிறார்கள்.
இனிதாக ஆரம்பிக்கும் உறவு, குழந்தையின் வரவால் இல்லறமாக உயர எழும்புகிறது. இன்னும் இறுகும் தருணத்தில் கணவன் - மனைவி பந்தத்துக்கு இடையில் நுழையும் ஒரு புது உறவால் விழுகிறது விரிசல். தம்பதி அதை ஊர், உறவுகளிடம் சொல்லி பிரச்னையை சிக்கலாக்க, துன்பம் தொடர்கதையாகிறது.
தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கணவனோ அல்லது மனைவியோ 'இவர் என் வாழ்க்கைப் பயணத்தில் இனி வேண்டாம்' என ஒருதலைபட்சமாகத் தீர்மானித்து 'விவாகரத்து' என்ற அமிலத்தை நீட்ட... இன்னொருவர் 'இல்லை.. உன்னோடுதான் வாழ்வேன்' என்று அழுது அடம்பிடித்து அன்பை நீட்ட... அது மீடியாக்களின் தலைப்புச் செய்திகளாகி விடுகின்றன. நடிகர் பிரபுதேவா-ரமலத் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த கோபிகா விவகாரங்களைப் போல!
இவர்கள் விஷயத்தில் வீதிக்கு வந்த இந்த சிக்கல் இன்னும் பல வீடுகளுள் உறுமிக்கொண்டுதான் இருக்கிறது. ஏன் இந்த விரிசல்கள்... இதற்கு தீர்வுதான் என்ன..?
- கேள்விகளோடு சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் மாலாவை அணுகினோம்.
''நாகர்கோவில் கோபிகா, ரமலத்-பிரபுதேவா இருவரின் பிரச்னையை ஊன்றி கவனிச்சா, அவங்க நல்ல கணவன்-மனைவியாகத்தான் இருந்திருக்காங்க. நண்பர், தோழி என்ற இன்னொரு நபர் அவர்கள் வாழ்க்கைக்குள் நுழையாதவரை. பிறகு மனம், வீடு இரண்டுமே ரணகளமாகிவிட்டன. இதில் கோபிகா அடம்பிடித்து, போராடி அரசியல் தலைவர்கள் வரை பஞ்சாயத்து பேசி கணவருடன் சேர்ந்துள்ளார். ஆனாலும்கூட பிரச்னை முடிந்தபாடில்லை.
இப்படி முரண்'பட்டு'ப்போன வாழ்க்கைத் துணையை வற்புறுத்தி வாழ்ந்தால் அந்த வாழ்க்கையில் அதன் பின்பும் சிக்கல்கள் வரலாம். 'நீதானே அடம்பிடிச்சு வந்த' என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் குத்திக் காட்டும்போது அங்கு விலகல் அதிகரிக்க, கூடவே, 'ஐயோ நான் இவன்/இவளிடம் தோற்றுவிட்டேனே..?' என்ற ஈகோ நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கும். அதன் வெளிப்பாடாக 'பழிவாங்க வேண்டும்' என்ற வேறொரு வகை வன்முறை வெடிக்கும்.
மாறாக, சந்தோஷமாக வாழ்வதற்காக வாய்ப்புகளும் இருக்கின்றன. இரண்டு பேரும் மனதளவில் ஈகோவுக்கு கொள்ளி வைத்துவிட்டு பரஸ்பர மன்னிப்புகள் பரிமாறி, 'நாம் சேர்ந்து வாழ்வதால் இந்தந்த நன்மைகள் இருக்கின்றன' என்பதை உணரும்போது சிக்கலுக்குப் பின்னும் வாழ்க்கை அழகாகும்...'' என்று சொன்னவர்,
''இதுபோன்ற பிரச்னைகள் தம்பதிகளுக்குள் தலைதூக்க அவர்கள் இருவர்தான் காரணம் என்று குற்றம் சுமத்துவதைவிட, வாழ்க்கைச் சூழலும் நம் சந்தோஷத்தை தீர்மானிக்கிற எஜமானாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கணவனோ, மனைவியோ பணியின் காரணமாக வீட்டை விட்டு அதிக நேரம் வெளியே இருக்கும்போது அங்கு கிடைக்கும் நட்புகளிடம் மனம்விட்டு பேச வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தொடர்ந்து பேசப்பேச ஒருவருக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு வருகிறது. பிரச்னை என்று ஒருவர் சொல்லும்போது மற்றொருவர் காட்டும் அக்கறையால் அவர்களுடைய 'ப்ரசென்ஸ்' 'ப்ளசன்ட்'டாகத் தோணுகிறது. இந்த 'ப்ளசன்ட்டான' மூடுடன் வீட்டுக்குப் போனால் அங்கே வாழ்க்கைத் துணை வழக்கமான சொந்தங்கள், குழந்தைகளின் ஃபீஸ், கொடுத்த வாக்குறுதிகள் என வீட்டுப் பிரச்னை எதையாவது உருட்ட, ப்ளசன்ட்டான அந்த நட்புதான் பெட்டர் என்று தோண, அன்பு திசை மாறி குடும்பம் சிதைய ஆரம்பிக்கிறது!
இதற்கு தீர்வில்லாமல் இல்லை. என்னதான் புது உறவுகள் வந்து சேர்ந்தாலும், அவர்களை வாழ்க்கைக்குத் துணையாக நினைத்துக் குழம்பாமல் 'நட்பு'டன் மட்டுமே நிறுத்திவிடும் அளவுக்கு தம்பதியின் இல்லறம் தரமாக இருக்க வேண்டும். அதற்கு அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், புரிதல் என எல்லாம் அவர்களுக்குள் வேண்டும்!'' என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்.
கணவன், மனைவியை நிராகரிக்கும்போது, 'நான் என் கணவனுடன்தான் வாழ்ந்தாவேன்' என்று மனைவி சொன்னால், இந்திய திருமணச் சட்டங்கள் என்ன சொல்கிறது என்று வழக்கறிஞர் அருள்மொழியிடம் வினவியபோது...
''கணவனோ அல்லது மனைவியோ காரணமேஇல்லாமல் தங்கள் துணையை நிராகரிக்க சட்டப்படி இயலாது. அப்படி ஒருவர் செய்யும்பட்சத்தில் திருமண உரிமை மீட்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம். அப்படி ஒருவர் வழக்கு தொடுக்கும்போது எதிர்தரப்பு விவாகரத்து கேட்டு வழக்கு தொடுக்கும். நீதிமன்றம் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு அதிக நியாயம் இருந்தால் நிச்சயம் இருவரையும் சேர்ந்து வாழ உத்தரவிடும். ஆனால் அதே நீதிமன்றத்தால் 'கட்டாயம் நீங்கள் சேர்ந்து வாழ்ந்துதான் ஆகவேண்டும்' என்று கட்டாயப்படுத்த முடியாது. இருந்தாலும், திசை மாறிய தன் துணையை மன உறுதியாலும் அன்பான அணுகுமுறையாலும் மீண்டும் தனதாக்கிக்கொள்ளலாம் என்பது, பலர் உணர்ந்த அனுபவ உண்மை, நடிகர் ஸ்ரீகாந்த - வந்தனா போல!''
- 'நச்'சென்று சொன்னார் அருள்மொழி.
மனமிருந்தால்... அதுவும் 'ஒருவர்' மட்டுமே வாழும் ஆலயமாக இருந்தால்... ஒரு நாளும் ஆபத்தில்லை!
- நாச்சியாள்

Thanks:Aval Vikatan

1 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

பெரும்பாலும் பெரும் எதிர்பார்ப்புடனும் பெரும் காதலுடனும் தொடங்கும் மன வாழ்க்கை, வியாபார ரீதியாகி விடுகிறது.. பல குடும்பங்களில் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக யாரோ ஒருவர் கடும் மன துயரங்களை இரும்பு இதயத்துடன் சமாளித்து வருவதால் தான் பல குடும்பங்களில் பிரச்சினை இல்லாதது போல் தெரிகிறது.. நீங்கள் கணவன் மனைவியாக இருக்கும் வரை பிரிந்து செல்ல உரிமை உண்டு, ஆனால் அப்பா அம்மா என்று ஆனா பிறகு உங்களுக்கு பிரிந்து செல்ல உரிமை இல்லை என்பதை நீதிமன்றமும் சரி சமுதாயமும் சரி பார்ப்பதில்லை..

Post a Comment