இது ஐ.ஐ.டி சீனியர்ஸின் அட்வைஸ்
தென்றல்
ஐ.ஐ.டி'... பல மாணவர்களின் கனவு தேசம்! அதேசமயம்... 'அங்கெல்லாம் படிக்க ரொம்ப நாலெட்ஜ் வேணும், கணக்குல புலியா இருக்கணும், ஃபிசிக்ஸ்ல சிங்கமா இருக்கணும், கெமிஸ்ட்ரியில சிறுத்தையா இருக்கணும்’ என்ற பயத்தில் பலர் அங்கு சேர்ந்து படிப்பது பற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
'அப்படியெல்லாம் விலக வேண்டாம், விரும்புங்கள் மனமார... விண்ணைத் தொடுவீர்கள்!’ என ஐ.ஐ.டி கனவுகளுடன் காத்திருக்கும் ஜூனியர்களுக்கு வழி காட்டுகிறார் 2009-ல் 'ஐ.ஐ.டி-ஜே.ஈ.ஈ’ நுழைவுத் தேர்வு எழுதி, ரேங்க் ஹோல்டராக வெற்றி பெற்று, தற்போது மெட்ராஸ் ஐ.ஐ.டி நிறுவனத்தில் இன்பஃர்மேஷன் டெக்னாலஜி படிக்கும் அபர்ணா.

'என்.சி.ஈ.ஆர்.டி (NCERT - National Council of Educational Research and Training)’ அங்கீகாரம் உள்ள பாடப் புத்தகங்களை முழுமையா, தெளிவா கத்துக்கணும். அதுதான் சரியான ஃபவுண் டேஷன். சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ ஸ்கூல்களோட பாடதிட்டம் என்.சி.ஈ. ஆர்.டி பரிந்துரைபடிதான் இருக்கு. ஆனா, மெட்ரிக், ஸ்டேட் போர்டு சிலபஸ் ஸ்கூல்ஸ் அப்படி கிடையாது. நாட்டுல இந்த ஸ்கூல்களோட எண்ணிக்கைதான் அதிகம். அதனால, இதுல படிக்கற மாணவர்கள் கூடுதல் பயிற்சிகள் எடுக்கணும். எந்த சிலபஸ்ஸா இருந்தாலும், ஸ்கூலுக்கு வெளியேயும் சில முயற்சிகளை எடுக்கணும்.
ப்ளஸ் ஒன் வந்ததுமே... நல்ல கோச்சிங் சென்டர்ல சேர்ந்து படிக்கிறது முக்கியம். காரணம் ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ்-ஐ அலசி ஆராய்ச்சி பண்ணி படிக்கற கலையை நல்ல ஆசிரியர் ஒருத்தர் துணையில்லாம செய்றது கஷ்டம். இந்த சப்ஜெக்ட்கள்ல இருக்கும் ஒவ்வொரு கான்செப்டையும் சரியான முறையில புரிஞ்சுக்கறதுக்கும், நம் பாடப் புத்தகத்துல இல்லாத கணக்குகளை சொல்லித் தர்றதுக்கும் இந்த கோச்சிங் உதவுதுங்கறதை உறுதிப்படுத்திக்கிட்டு, அதைத் தொடர்றது நல்லது'' என்ற அபர்ணா,
''தொடர்ந்து படிச்சுட்டே இருக்காம, நமக்குப் பிடிச்ச பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸுக்கும் நேரம் ஒதுக்கணும். அப்பத்தான் நம்ம மைண்ட் ஃபிரெஷ்ஷா இருக்கும். இதுல நெகட்டிவ் மார்க்கும் இருக்கறதால இன்னும் கொஞ்சம் அதிக சிரத்தையோட பிரிப்பேர் பண்ணணும்'' என்று அக்கறையுடன் வழிகாட்டினார்.
''ஒரு கான்செப்டை சரியாக புரிஞ்சுக்க பாடப் புத்தகம் மட்டும் உதவாது. வெப்சைட்ல ஐ.ஐ.டி-யோட சிலபஸ்ஸ பார்த்துட்டு, வெளியில நல்ல ஆத்தர்ஸ் எழுதின ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணக்குப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கறது ரொம்ப அவசியம்'' என்று ஆரம்பித்த ஸ்ரீநிகேதன், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யில் முதலாமாண்டு படிக்கும் மாணவர். தொடர்ந்தவர்,
''எந்த சப்ஜெக்ட்ல நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கோ அதுக்கு நிறைய நேரம் செலவு செய்து படிக்கணும். உதாரணமா, 'அல்ஜீப்ரா கணக்குல நான் கிங். ஆனா, இன்டக்ரல் கால்குலஸ்ல கொஞ்சம் வீக்’னு நினைச்சா, அந்த சேப்டர்ல அதிக கணக்குகளைத் திரும்பத் திரும்ப போட்டுப் பாக்கணும். அதேபோலத்தான் ஒவ்வொரு பாடத்துலயும். கெமிஸ்ட்ரியில, 'ஃபிசிக்கல் கெமிஸ்ட்ரி என் ஃபேவரைட், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என் ஃப்ரெண்ட். ஆனா, இன்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி கொஞ்சம் தூரம்’னு அந்த சப்ஜெக்ட் மேல் ஒருவித வெறுப்பையும் அச்சத்தையும் வளர்த்துக்காம, உங்க ஃப்ரெண்ட்ஸ்ல அந்த சப்ஜெக்ட்ல யாரு கில்லாடியோ அவங்ககூட உட்கார்ந்து புரியற வரைக்கும் படிக்கலாம்'' என்றவர்,
''ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களைப் பொறுத்த வரை மகாராஷ்ட்ரா, ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்ல இருந்துதான் அதிக மாணவர்கள் ஜாயின் பண்றாங்க. தமிழ்நாட்டுல இருந்து, குறைவானவங்கதான் வர்றாங்க. நம்ம மாணவர்கள், டீச்சர்ஸ், ஸ்கூல் எல்லாமே பப்ளிக் எக்ஸாம்ல நிறைய மார்க் வாங்கி, அண்ணா யுனிவர்சிட்டியில சேர்றதுலதான் அதிக உழைப்பைக் கொட்டுறாங்க. உலகத்தோட பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள், ஐ.ஐ.டி மாணவர்களை வேலைக்கு எடுக்கறதுல ஆர்வம் காட்டுறப்ப... அதுல தமிழ் மாணவர்களும் இருக்கணும்தானே?!'' என்று கேட்ட ஸ்ரீநிகேதன்,
''திட்டமிட்டு உழைச்சு, தினமும் சரியா நேரம் ஒதுக்கிப் படிச்சா... 15 ஐ.ஐ.டி நிறுவனங்கள்ல எல்லாரும் திரும்பிப் பார்க்கற சதவிகிதத்துல தமிழ் மாணவர்களும் இடம் பிடிப்போம்!'' என்று பிராக்டிகல் வழி சொன்னார்.
வெற்றி நம் கையில்தானே!
படங்கள்: து.மாரியப்பன்
0 கருத்துரைகள்:
Post a Comment