உருட்டி,மிரட்டும் உணவுப் பஞ்சம்...தடுத்து நிறுத்த நம்மால்தான் முடியும்!

on Wednesday, August 31, 2011
உருட்டி,மிரட்டும் உணவுப் பஞ்சம்...தடுத்து நிறுத்த நம்மால்தான் முடியும்!
நாச்சியாள்
''உணவுப் பஞ்சம் வரப்போகுதாமே?! இப்ப இருக்கற விலைவாசியோட கொடுமையையே தாங்க முடியல.
இதுல உணவு பஞ்சம் வேற வந்தா நிலமை என்னாகறது..?''
- இதுதான் சமீபகாலமாகவே மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொதுஜனத்தின் கவலை தோய்ந்த கேள்வி... செய்தித்தாள், தொலைக்காட்சி, இன்டர்நெட் என்று
எல்லா ஊடகங்களின் முக்கியச் செய்தி!
'உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு' என்று சொல்லப்படும் நம் இந்திய நாட்டில், பல கோடி பேர் அரை வயிறு, கால் வயிறோடுதான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக் கிறார்கள்.
நடக்கும் பட்டினிச் சாவுகள், 'பத்தோடு பதினொண்ணு, அத்தோடு இது ஒண்ணு' எனும் ரீதியில்தான் அரசாங்கத்தால் அணுகப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உணவுப் பஞ்சம் வேறு வந்தால்... நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறதுஅல்லவா?
''நம் விவசாய நாட்டுக்கு ஏன் இந்த அவலம்?! இதனை தடுக்க முடியாதா..? அட்லீஸ்ட் குறைக்கவாவது வழியிருக்கிறதா..?'' என்று தாய்மை உணர்வோடு வல்லுநர்கள் சிலரிடம் கேட்டோம்..!
வந்து விழுந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்மை சுள்ளென்று சுடத்தான் செய்தன...
அதையெல்லாம் படித்து முடித்ததும்... ' இந்த விஷயம் நம்மை சுட்டு என்ன செய்ய... இதற்கு தனி நபராக நம்மால் என்ன செய்யமுடியும்... நாம் ஏன் கவலைப்பட வேண்டும்..?' என்றெல்லாம்கூட உங்களுக்குத் தோன்றலாம். அதைப் பற்றி கடைசியாக பேசிக்கொள்வோம்... முதலில் வல்லுநர்களின் குரலுக்கு செவி மடுப்போமா?!
'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார்: ''இன்றும் நம் நாட்டில் தினமும் இரவு உணவு இல்லாமல் சுமார் முப்பது கோடி பேர் படுக்கைக்குச் செல்கிறார்கள். இந்த நிலைமை இன்னும் கடுமையாவதுபோல்தான் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் சூழ்நிலைகள் உள்ளன.
இதற்கு முதல் காரணம், பூமி சூடாகி வருவது. இதைப் பற்றி பரவலாகப் பேச்சு அடிபட்டாலும் அதைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. பூமி சூடானால் என்னாகும்... பருவநிலையில் மாற்றம் வரும். அதை இப்போதே நாம் அனுபவித்துக்கொண்டுதான் உள்ளோம். மழை, காலம் தவறிப் பெய்கிறது. வெயில், காலம் கடந்தும் தொடர்கிறது. நம் நாட்டில் 60 சதவிகித விவசாய நிலம் மழையை மட்டும் நம்பித்தான் இருக்கிறது. பருவமழையில் மாற்றம் வரும்போது, உற்பத்தி குறையும். இந்த வருடம் 28% மழை குறைவாகப் பெய்துள்ளதால், விவசாய உற்பத்தி 22% குறையும்.
மத்திய அரசின் விவசாயக் கொள்கைகள், அடுத்த காரணம். அரிசி, கோதுமையை சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு வாங்கி, இங்கு ரேஷனில் குறைந்த விலைக்கு விற்று, அரிசியும் கோதுமையும்தான் இந்திய மக்களின் பிரதான உணவு என்ற கட்டாயத்தை உருவாக்குகிறது அரசு. இதனால் சத்து நிறைந்த புஞ்சை தானியங்களான கம்பு, சோளம், தினை, வரகு, சாமை எல்லாம் புறந்தள்ளப்பட்டு விட்டன. நாம் சாப்பிடுவதற்குப் பயன்படுத்துகிற புஞ்சை தானியங்களை வெளிநாட்டினர் வாங்கி கோழித் தீவனம், கால்நடை தீவனம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.
இன்றைய நிலைமையில் நம் நாட்டில் விலையுயர்ந்தது மின்சாரமும் தண்ணீரும்தான். விலையுயர்ந்த இவற்றைப் பயன்படுத்தி அத்தியாவசிய தேவைக்கான உணவுப்பயிர்களை விளைவிக்க வேண்டும் என்று நம் விவசாயிகளை அரசு ஊக்குவிப்பதில்லை. பதிலாக, கரும்பு, வாழை, புகையிலை, பருத்தி போன்ற பணப்பயிர்களை விளைவிக்கச் சொல்லித்தான் வற்புறுத்துகிறது. இத்தகைய சூழலில், உணவுப் பஞ்சம் வராமல் என்ன செய்யும்?!''
'ஜீரோ பட்ஜெட்' எனும் செலவில்லாத விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுத்தந்து வரும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர்: ''பதினைந்து ஆண்டுகளுக்கு முன் போதிய உணவு கையிருப்பில் இருந்தது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து விவசாயத்தை இரண்டாம்தர தொழிலாக நடத்துவதால் நிலைமை மோசமாகிவிட்டது. வேதி உரங்களைப் போட்டால் விவசாய உற்பத்தி கூடும் என்றது அரசு. ஆனால், உண்மை அதற்கு மாறாக இருக்கிறது. உரச் செலவுகூட வருமானமாகக் கிடைக்காதால் கடனில் மூழ்கி தற்கொலை செய்து கொள்கின்றனர் விவசாயிகள்.
இந்தியாவில் விவசாய நிலம் 40 கோடியே 83 லட்சம் ஏக்கர்தான் இருக்கிறது. அந்த நிலத்திலும் சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலம், தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட்டுகள் என வருடத்துக்கு 0.5 சதவிகித நிலத்தை கூறு போடுகிறார்கள்.
2050-ல் இந்திய மக்கள்தொகை இன்றிருக்கும் 110 கோடியிலிருந்து இரட்டிப்பாகும். அப்போது மக்களுக்கு உணவு அளிக்க, உணவு உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். இருக்கும் விவசாய நிலத்தை அதிகரிக்க முடியாது. உற்பத்தியை அதிகரிக்க செயற்கை உர விவசாயம் எந்த விதத்திலும் கைகொடுக்காது. இவையெல்லாம் உணவுப் பற்றாக்குறையை 'வா, வா' என இன்விடேஷன் வைத்து அழைக்கின்றன.''
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 'உணவு பாதுகாப்பு ஆலோசகர்' முனைவர் சுரேஷ்: ''இந்தியாவில் உள்ள 'அனைத்து மக்களுக்கும் உணவு' என்ற திட்டம் அபாயத்தில் இருக்கிறது. சேமிப்புக் கிடங்குகளில் தேவையான உணவு கிடையாது.
அரசு, வெளிநாட்டிலிருந்து தேங்காய், பாமாயில், பயறு வகைகள், கோதுமை, அரிசி என எல்லாவற்றையும் இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தையை கேள்விக்குறியாக்குகிறது. உள்நாட்டு சந்தையில் விலை கிடைக்கவில்லையென்றால், விற்கவில்லை என்றால் எதற்கு அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என விவசாயிகள் நினைக்கிறார்கள். அதனால் வெளிநாட்டுக் கோழிகளுக்கும், பன்றிகளுக்கும் இங்கு தீவனங்களைப் பயிர் செய்கிறார்கள்.
கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் 30% பயறு உற்பத்தி குறைந்திருக்கிறது. ரெண்டு லட்சம் ஹெக்டரில் அரிசி உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. நிலத்தடி நீரை எவ்வளவு மோசமாக சுரண்ட முடியுமோ, அவ்வளவு தூரம் சுரண்டியிருக்கிறோம். அடுத்த 10 வருடங்களுக்கு தொடர்ந்தும், தேவைக்கு அதிகமாகவும் மழை பெய்தாலும் நிலத்தடி நீரை மீட்கவே முடியாது எனும் நிலை. என்ன செய்யப் போகிறோம்...?!''
'பூமி சூடாவதற்கும், உணவு பஞ்சம் வருவதற்கும் இவர்கள் சொல்லும் காரணங்கள் புரிகிறது. ஆனால், தனி மனிதன் நான் என்ன செய்ய முடியும்...? என் கைகளில் என்ன இருக்கிறது..?' என்று நாம் ஒதுங்கிப் போய்விட முடியாது. எல்லாம் நம் கைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.
பூமி சூடாவதை குறைப்பதில் நம் பங்காக, ஏர்கண்டிஷனர், ஃப்ரிட்ஜ் போன்ற வற்றை அதிகம் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தலாம். காரணம், மின்சாரத்துக்காக நிலக்கரியை எரிக்கிறோம். அப்போது உண்டாகும் வெப்பமும், பூமி சூடாக ஒரு காரணம்.
நாம் குடியிருக்கும் இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவில் விளைந்து வரும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். காரணம்... விமானம், கடல், லாரி போன்றவற்றில் உணவுப் பொருட்களை கொண்டுவர ஆகும் எரிபொருள் செலவும், அதனால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடும் அதிகம்.
அரிசி, கோதுமையை மட்டும் பிரதான உணவாகக் கருதி சாப்பிடாமல் எல்லா சத்துக்களும் நிறைந்த கேழ்வரகு, தினை, கம்பு என்று சரிவிகித உணவு முறைக்கு மாற வேண்டும்.
வறட்சியால் ஏற்படும் பட்டினியைத் தவிர்க்க, வீட்டை சுற்றியுள்ள இடங் களில் மா, வாழை, கறிவேப்பிலை, மாதுளை, பப்பாளி, சீத்தா, முருங்கை என்று குறைந்தபட்சம் 10 மரங்களையாவது நடலாம். அதிலிருந்து கிடைக்கும் உணவு, சிக்கலை சீராக்கும். இடவசதி இல்லாதவர்கள் மொட்டைமாடி தோட்டம், சாக்குப்பை, தொட்டி என கிடைத்தவற்றிலெல்லாம் காய்கறி செடி வளர்க்க லாம்.
இந்த விஷயங்களையெல்லாம் நம் தலைமுறையினர் அனைவரும் ஆயுள் வரைக்கும் பின்பற்றினாலே... பூமி சூடாவதை கொஞ்சமேனும் தடுக்க முடியும். உணவுப் பஞ்சத்துக்கும் 'ஸ்பீட் பிரேக்கர்' போட முடியும்.
சின்னச் சின்ன மாற்றங்கள்தான் பெரிய விஷயங்களைப் புரட்டிப்போடும். மாற்றம் நம்மில் இருந்து ஆரம்பிக்கட்டுமே!
  Thanks:Aval vikatan

0 கருத்துரைகள்:

Post a Comment