on Thursday, August 18, 2011
நாச்சியாள்
படம்: எம்..உசேன்
கண்ணீரைத் துடைக்குமா கல்விக் கட்டண சீரமைப்பு ?
"நான் பன்னிரண்டாவது படிச்சு முடிக்கற வரைக்கும் நோட் புக், பஸ் செலவு, யூனிஃபார்ம் செலவு உள்பட மொத்தமா ஏழாயிரம் ரூபாய்தான் என்னோட அப்பாஅம்மா செலவு பண்ணியிருக்காங்க. எங்கப்பா அவரோட பழைய கணக்கு நோட்டை எடுத்துப் பார்த்துட்டு, இதைச் சொன்னப்ப... எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. இப்ப மூணாங்கிளாஸ் படிக்கிற என் மகனுக்கு ஒரு டெர்ம்க்கே ஏழாயிரம் ரூபாய் ஃபீஸ். அவன் ப்ளஸ் டூ முடிக்குறப்ப... என் சம்பாத்தியத்துல 30-40% அவனோட ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதுக்கே செலவு பண்ண வேண்டி வரும்போல இருக்கு...''
இப்படி புலம்புவர், கைநிறைய சம்பளம் வாங்கும் 'குரூப் ஒன்' அரசு அதிகாரி.
இதுபோன்ற புலம்பல்களுக்கு விடியலாக தமிழக அரசு, தனியார் பள்ளிகளின் கட்டண சீரமைப்புக்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, தமிழகத்தில் உள்ள 10,934 பள்ளிகளின் வரவு செலவு கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணத்தை நிர்ணயித்தது. அதை எதிர்த்து தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. 'அரசின் கட்டணம் சரியானது' என்று தலையில் ஓங்கி அடித்து தீர்ப்பு வந்துவிட்டது.
இந்நிலையில், 'பள்ளியை ஜூன் 2ல் திறக்கமாட் டோம்', 'கட்ட ணத்தை பல மடங்கு உயர்த் தினால்தான் கட்டணமே வசூலிப்போம்' என்றெல்லாம் மாறி மாறி குரல் கொடுத்துக் கொண்டுள்ளனர் தனியார் பள்ளியினர்.
இந்தச் சூழலில், கட்டண சீரமைப்பு குறித்த விரிவான உள் தகவல்களை அறியவும், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இதன் மூலம் விடிவு பிறக்குமா என்ற அதிமுக்கிய கேள்விக்கான பதிலை அறியவும்... சில துறை வல்லுநர்களைச் சந்தித்தோம்.
"கட்டண சீரமைப்புக்கு சரியான செயல் வடிவம் கொடுக்கத் தவறும்பட்சத்தில், அது ஒரு கண் துடைப்பாகவே இருக்கும்'' என்று அதிரவைத்து ஆரம்பித்தார் Ôதோழமை' மனித உரிமை அமைப்பை சேர்ந்த தேவநேயன்.
"இதில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. முதலில் கல்வியை பொதுமையாக்காமல் தனியாரிடம் ஒப்படைத்தது மக்களுக்கு செய்கிற பெரிய துரோகம். அடுத்ததாக, இப்போது இவர்கள் நிர்ணயித்திருக்கும் இந்தக் கட்டணங்கள் சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பதை யார் கண்காணிக்கப் போகிறார்கள்? அதிகக் கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? இதைப் பற்றியெல்லாம் தெளிவாக சொல்லப்படவில்லை.
2004 ஜூலை 16ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கோர தீ விபத்துக்குப் பின் அமைக்கப்பட்ட 'சம்பத் கமிட்டி', 'சரியான கழிவறைகள், உள்கட்டமைப்பு வசதி இல்லாத பள்ளிகளை மூடி விட வேண்டும்' என்றது. ஆனால், அதன்பிறகும் அப்படித்தானே இருக்கின்றன பெரும்பாலான பள்ளிகள்? இந்த 'கோவிந்தராஜன் கமிட்டி'யும் அப்படி ஆகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதையெல்லாம் தாண்டி, பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலித்தால்... அதைப் பற்றி ஒரு பெற்றோரால் தன் பிள்ளைகளின் நலனையும் மீறி கம்ப்ளெயின்ட் கொடுத்துவிட முடியுமா?
மொத்தத்தில், இந்தக் கட்டண நிர்ணயம் பள்ளிகள் அடிக்கும் கொள்ளையை ஓரளவு குறைக்குமே தவிர, முழுமையாக ஒழிக்காது'' என்றார் தேவநேயன்.
சென்னை, கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி நிர்வாகியும், எழுத்தாளருமான நடராஜன். "ஆழமான புரிந்துகொள்ளும் திறனை வளர்க்கக் கூடிய கல்வித்திட்டம் அரசு பள்ளிகளில்தான் இருக்கிறது. அதிக திறமையுடன் கற்பிக்கும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களிடம்தான் உள்ளது. இன்று, உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், சிந்தனாவாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் இந்தக் கல்வி முறையில் வளர்ந்தவர்கள்தான்.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நடப்பது டீச்சிங் அல்ல; ஒரு விளையாட்டு வீரனை உருவாக்க தினமும் காலை, மாலை 'பிராக்டீஸ், பிராக்டீஸ்' என துரத்தும் 'கோச்சிங்' முறை கல்விதான்'' என்று சாடியவர்.
"கிராமத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் கஷ்டப்படுகின்றன. எனவே, கல்விக் குழுக்களை அமைத்து, எல்லா பள்ளிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு கட்டணத்தை நிர்ணயித்து இருக்கலாம். அதில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருடா வருடம் கட்டணத்தை 10% உயர்த்திக் கொள்ளலாம் என்ற ஆப்ஷனைக் கொடுத்திருக்கலாம்'' என்றவர்,
"இன்னொருபுறம் இந்தக் கட்டண நிர்ணயத்தால் நகர்புறத்தில் இயங்கும் பள்ளிகள் பேட்ஜ், டை, ஐ.டி கார்டு, யூனிஃபார்ம், புத்தகங்கள், எக்ஸ்ட்ரா டியூஷன், விழாக்கள் என மாணவர்களிடம் வேறு வழிகளில் கட்டணத்தை வசூலிப்பார்கள். தவிர, தனியார் பள்ளிகளுக்கு விளம்பரம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம், வாகனம், வாகனப் பராமரிப்பு என 117 வகை செலவீனங்கள் உள்ளன. நிறைய பள்ளிகள் மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணம், செலவு பற்றிய சரியான தகவல்களை வைத்திராமல் ஏமாற்றுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதையும் விசாரித்து சீர்படுத்தும்விதமாக இருக்க வேண்டும் இந்த கட்டண நிர்ணயம்'' என்றார் அக்கறையுடன்.
சமச்சீர் கல்வி, தாய்மொழிவழிக் கல்விக்காக நெடுங்காலம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் கல்யாணியிடம் பேசியபோது, "ஆரம்பத்திலிருந்தே இவ்வளவு அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் அதிகாரத்தை இப்பள்ளிகளுக்கு யார் வழங்கியது..? அரசுதானே? இன்று அதை முறைப்படுத்தும்போது இந்தப் பள்ளிகள் அலறுகின்றன என்றால், இதுவரை வந்த கொள்ளை லாபம் பாதிக்கப்படும் என்பதால்தான் என்கிற உண்மை எல்லோருக்கும் புரியும்.
ஆங்கில வழி கல்வியில் கற்றால், உயர் கல்விக்கு போக முடியும் என்றுதானே இவர்கள் கடை விரிக்கிறார்கள்? ஆனால், கடந்த 2009ல் ஐ.ஐ.டிக்கு சென்ற ஆந்திர மாணவர்கள் 1,697; தமிழ்நாட்டிலிருந்து வெறும் 202 பேர்தான். அப்படியானால், நல்ல தரமான கல்வியைத் தருகிறோம் என்கிற விளம்பரம் ஏமாற்று வேலைதான். காரணம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் +1, +2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடக்கிறது. ஆகையால், அடிப்படை கல்வியைக் கற்றுத்தான் ஆகவேண்டும். தமிழ்நாட்டில், பெரும்பாலான பள்ளிகளில் +1 படங்கள் நடத்தப்படாமல், மாணவர்களை நேரிடையாக +2 வகுப்பு பாடங்களை மனப்பாடம் செய்ய வைப்பதால், அடிப்படை புரியாமல் படிக்கும் மாணவனால், எங்கும் பிரகாசிக்க முடியாமல் போகிறது என்பதுதான் சுடும் எதார்த்தம்.
இதற்கு தாய்மொழி வழிக்கல்விதான் சரியான தீர்வு. அதைச் செயல்படுத்த அரசுக்கு ஆண்டுக்கு வெறும் 65 கோடிதான் செலவாகும். ஆனால், அதைச் செய்ய மறுக்கிறது அரசு. பள்ளிகளை அரசே நடத்தினால் இந்தக் கல்விக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கல்வியை அரசே நடத்துவதுதான் எல்லாருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதற்கான, சமூகநீதிக்கான உத்தரவாதத்தை அளிக்கும்!'' என 'வலி' தீர்க்கும் 'வழி' சொன்னார் கல்யாணி.
கல்வி, வெறும் எழுத்துக்களல்ல; பிரகாசமான எதிர்காலத்துக்கான வழி. உணர வேண்டும் பொறுப்பிலுள்ளவர்கள்!
சி.பி.எஸ்.ஸி. பள்ளிகளுக்கும் பொருந்தும்!
'இந்தக் கட்டண சீரமைப்பு, தனியார் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி. பள்ளிகளுக்கும் பொருந்துமா..?' என பெற்றோர்களிடம் ஒரு சந்தேகம் கிளம்பியிருக்கிறது. இதைப்பற்றி பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டோம்.
"சந்தேகமே வேண்டாம்... அவர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இதுகுறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது!'' என்று சொன்னார்!

0 கருத்துரைகள்:

Post a Comment