"விவசாயம்தான் என் மனசுக்குப் பிடிச்ச, நான் செய்யப்போற தொழில்!"
\ இப்படிச் சொல்பவர்... இப்போது இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று தொழிலாற்றிக் கொண்டிருக்கும் எம்.சசிகுமார்.
'சுப்ரமணியபுரம்', 'பசங்க', 'நாடோடிகள்' என வரிசையாக தன்னுடைய படங்களில் கிராமத்தின் இயல்பான வாழ்க்கையை, அந்த மனிதர்களின் அழகான இதயங்களை, உன்னதமான உணர்வுகளை அட்சரம் பிசகாமல் பதிவு செய்தவர் சசிகுமார்.
தன் சிறு வயது சேட்டைகளை, கிராமத்தின் மீதான தனது நேசத்தை, பொங்கல் பண்டிகையின் சாரத்தை இங்கே எளிமையான வார்த்தைகளில் பகிர்ந்துகொள்கிறார் கிராமிய சிறப்பிதழுக்காக!
''எனக்குச் சொந்த ஊர் மதுரைக்கு பக்கத்துல இருக்கற புதுத்தாமரைப்பட்டி. அங்கதான் பிறந்து வளர்ந்தேன். வெவசாயக் குடும்பம்தான் நம்மளுது. வீட்டுல அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமாங்க, அத்தைங்கனு வீடு முழுக்க ஆட்கள் நெறஞ்சிருப்பாங்க. சின்ன வயசுல படிச்ச பள்ளிக்கூடம் வயல்வெளிக்கு நடுவுல இருக்கும். ஜன்னல் வழியா பார்த்தா... சுத்தியும் பச்சப்பசேல்னு பயிருங்கதான் கண்ண நெறைக்கும்.
நம்மள சுத்தியும் எப்பவும் ஒரே நண்பர் கூட்டம்தான். கொஞ்சம் மீசை எல்லாம் வந்து 'அடேய்... நாம யூத்தாயிட்டோம்ல'னு தோணினப்ப பிடிச்ச விளையாட்டுனா... அது மாட்டுவண்டி ரேஸ். வீட்ல நம்ம மாட்டுவண்டிக்குனு இருக்குற டிரைவர்(?!)கிட்ட வண்டியை ஆட்டயப் போட்டு, ஃப்ரெண்ட்ஸ்எல்லாம் சேர்ந்து ரேஸ் வப்போம். ஃபர்ஸ்ட் வந்தாலும் வராட்டாலும் அப்படி தில்லா ரேஸ் விட்டதே ஒரு வார சந்தோஷத்துக்கு கியாரண்டியா இருக்கும்! ஆனா, வருஷம் பூரா சந்தோஷத்துக்கு கியாரண்டி தர்ற விஷயம்னா... அது பொங்கல்தான்.
ஆயிரத்தெட்டு திருநாள், பண்டிகைஎல்லாம் வந்து போனாலும்... வருஷா வருஷம் வர்ற பொங்கல் பண்டிகையோட மவுசே தனிதான். ஊருல, வீட்டுலனு எல்லாம் ஒரே திருவிழாக் கொண்டாட்டம்தான்! கிராமத்தையும், கிராமத்தைவிட்டு கிளம்பிப்போய் வெளியூர்ல பொழப்பு ஓட்டிக்கிட்டு இருக்கறவங்களையும் இன்னிக்கு வரைக்கும் பிணைச்சு வச்சிருக்கிற ஒரு 'பாச இழை', இந்தப் பொங்கல்தான். எந்த ஊர்ல இருந்தாலும், பொங்கல்னா சொந்த மண்ணுக்கு ஓடோடி வரணும்னு ஒரு மனுஷன உயிர்ப்போட வச்சிருக்குற பண்டிகை இது.
என்னை, நானே மீட்டெடுக்குறதும் இது மாதிரியான சந்தர்ப்பத்துலதான். வீடு முழுக்க, மனசு நிறைய சந்தோஷத்தோட நம்ம சொந்தங்கள் நம்மள சுத்தியிருக்கிறது என்னிக்கும் கிடைக்காத, காசு கொடுத்து வாங்க முடியாத அற்புதமான விஷயமில்லியா?
ரெண்டாம் நாள்... மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம், விடிஞ்சுரும் எங்கள மாதிரி வெடலப்பசங்களுக்கு! அன்னிக்கு ஆட்டம்னா ஆட்டம்... அப்புடி ஒரு ஆட்டம் போடுவோம்ல?! வீட்டுல இருக்கற மாட்டுல நமக்குப் பிடிச்ச மாடுங்க இருக்கும். அந்த மாடுகள குளிப்பாட்டுறது இருக்கே... அதுக்கே என்ன அலப்பற விடுவோம் தெரியுமா..? ஊர்பசங்க எல்லாம் திரண்டு மாடுகளோட குளத்துலதான் கிடப்போம்.
பிறகு, மாட்ட அழகு படுத்தறதுல ஒரு போட்டியே நடக்கும். நமக்குப் பிடிச்ச கலர்ல மாட்டுக்கொம்புக்கு பெயின்ட் அடிச்சு, கழுத்துல விதவிதமா மால போட்டு, அப்படியே ஊருக்குள்ள கூட்டிட்டு வரும்போது, முகத்துல ஒரு பெருமிதம் பொங்கும் பாருங்க..!
ஆனா, இப்படிப்பட்ட விஷயமெல்லாம் இப்ப மங்கிகிட்டு வர்றதுதான் வேதனை! கூட்டுக்குடும்பம், விவசாயம் இதெல்லாம் நம்மளோட அடையாளம். அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றோம். பத்து வருஷத்துக்கு முன்ன இருந்தது மாதிரி இல்ல இப்ப எங்க ஊரு. எல்லா கிராமங்களும் தனித்துவத்தை எல்லா வகையிலயும் இழந்துட்டுதான் வருது. பாதி பேர் விவசாயத்தை விட்டுட்டு. நெலத்தை வித்து பிளாட்டுகளா மாத்திட்டாங்க. ஆனா, காலத்துக்கும் நம்மள கௌரவமா, சுயமரியாதையோட வச்சிக் காப்பாத்துற ஒரே தொழில் விவசாயம்தான். தமிழ் சினிமா என்னை தாக்குப் பிடிக்குற காலம் வரைக்கும் இருப்பேன். அதுக்குப்பிறகு விவசாயம்தான் என் தொழிலா இருக்கும். அதுல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. இது வெறும் வார்த்தைஇல்ல... என் மனசு!
சரி, பொங்கல் வந்துடுச்சு. உங்களுக்காக ஊருல எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க. அதேபோல எனக்காகவும் அங்க காத்துக் கெடக்குது எங்க ஊரும், உறவும், வீடும், மாடும்! ஆமாம்... கூட்டுக் குடும்பத்துல வளர்ந்த எனக்கு அது தந்த சந்தோஷமும், கதகதப்பும், பாடமும், பாசமும் என்னனு தெரியும்! அதை என் புள்ள தவற விட்டுறக்கூடாதுனுதான் என் மனைவியையும், புள்ளையையும் சென்னைக்கு கூட்டிட்டு வந்து தனியா வச்சுக் கஷ்டப்படுத்தாம, ஊருல, உறவுகளோடயே விட்டிருக்கேன். அவுங்க ரெண்டு பேரும் இந்த தாடிக்காரனுக்காக பொங்கல ரொம்பவே எதிர்பார்த்துக் காத்துக் கெடப்பாங்க!
பொங்கலக் கொண்டாட கண்டிப்பா நீங்களும் உங்க மண்ணுக்குப் போங்க... இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!''
|
|
|  |
0 கருத்துரைகள்:
Post a Comment