சோழ நாடு சோறுடைத்து', 'சேர நாடு வேழமுடைத்து', 'பாண்டிய நாடு முத்துடைத்து' என்பது சொல்வழக்கு. அந்த ரிதத்தில் சொல்வதென்றால்... 'நம் இந்திய நாடு கல்வியுடைத்து'! ஆம்... அந்த அளவுக்கு நம் நாட்டின் கல்வி முறைக்கு உலக அளவில் மரியாதை உண்டு. அதனால்தான் தாய்நாடு தந்த தரமான கல்வியால் உலகின் எல்லா நாடுகளிலும் அறிவியல், விண்வெளி, கணினி என எல்லாத் துறைகளிலும் பரவி கோலாச்சி வருகின்றனர் இந்திய மைந்தர்கள்.
ஆனால், கல்வி முறை குறித்து மாநில மற்றும் மத்திய அரசுகள் அடிக்கடி நடத்திக் கொண்டிருக்கும் 'குழப்படி சித்தர்' வேலைகளைப் பார்க்கும்போது, அந்தக் கல்வி வெற்றிகரமாக பயின்று ஒரு மாணவன் வெளியேறுவது என்பது இனி வரும்காலங்களில் அவ்வளவு சாமான்யப்பட்ட விஷயமாக இருக்காது என்றே தோன்றுகிறது!
தமிழகத்தில் நான்குவிதமான போர்டுகள் மூலமான கல்விக்கூடங்கள் இருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், அறுபதுக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள், மாநிலப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு போர்டிலும் பாடத் திட்டங்களும், பாடங்களும் வேறுபடுகின்றன.
இப்போது, 'சமச்சீர் கல்வி' என்றொரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறது தமிழக அரசு. இதன்படி, சி.பி.எஸ்.இ. தவிர்த்த அனைத்து போர்டுகளின் பாடத் திட்டங்களையும் கிட்டத்தட்ட ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துவிடும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது அரசு. இதற்குப் பரவலாக ஆதரவும்... ஆங்காங்கே எதிர்ப்பும் கிளம்பிக் கிடக்கிறது.
இந்நிலையில், 'சி.பி.எஸ்.இ-யில் பயில்வோருக்கு 2010-2011ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது. விருப்பப்பட்டால் எழுதலாம் (ஆப்ஷனல்)' என்றொரு அறிவிப்பை வெளியிட்டு, அங்கேயும் குழப்படியை ஆரம்பித்து வைத்திருக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல்.
ஏற்கெனவே, பல்வேறு பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு ஒவ்வொருவித சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாலும், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளைப் பொறுத்தவரை எல்லா பாடத்திட்டங்களிலுமே பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. அரசு, தனியார் வேலைவாய்ப்பு, அடுத்த கட்ட உயர்கல்வி, அரசு உதவிகளைப் பெற... என பல விஷயங்களுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பெரிதாக எந்தச் சிக்கல்களும் எழாமல் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், 'விருப்பப்பட்டால் எழுதலாம்' என்ற அறிவிப்பு பல்வேறு தரப்புகளிலும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
"எங்கள் பிள்ளைகள் பத்தாவது பொதுத்தேர்வு எழுதாவிட்டால், எதன் அடிப்படையில் அவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பில் 'க்ரூப்' வழங்கப்படும்..? ஒருவேளை பதினொன்றாம் வகுப்புக்கு மெட்ரிக், ஸ்டேட் போர்டு என்று வேறு பள்ளிக்கு பிள்ளைகளை மாற்ற நினைத்தால், அங்கு அவர்களுக்கு எப்படி 'சீட்' தருவார்கள்..?'' என்றெல்லாம் பலபல குழப்பத்தில் புலம்புகின்றனர் பெற்றோர்.
"ஏற்கெனவே, சி.பி.எஸ்.இ. அடிப்படையில் படிக்கும் மாணவர்கள் மாநில அரசு நடத்தும் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் நுழைவதும், அட்மிஷன் பெறுவதும் சிக்கலாக உள்ளது. ஏனெனில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மெட்ரிக், ஸ்டேட் போர்ட் சிலபஸ் மாணவர்கள் 1,200 மதிப்பெண்களுக்கும், இவர்கள் 500 மதிப்பெண்களுக்கும் எழுதுகிறார்கள். தொழிற்படிப்பில் சேர்வதற்கு 'கட் ஆஃப்' 200 மதிப்பெண்கள் என்று சுருக்கப்படுகிறது. இதில் சி.பி. எஸ்.இ. தவிர்த்த மாணவர்கள் நிறைய மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கும் நிலையில், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 85% - 90% மதிப்பெண்களே அதிகபட்ச ஸ்கோர் என்பதாக இருக்கிறது.
இதுபோன்ற சிரமங்களால்தான் சி.பி.எஸ்.இ-யில் எட்டாவது வரை படிக்க வைத்துவிட்டு, ஒன்பதாம் வகுப்புக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மாற்றுகிறார்கள் பெற்றோர்கள். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்தால், சி.பி.எஸ்.இ-யில் படிக்கும் பிள்ளைகளும் பெற்றோர்களும் இன்னும் சிரமத்துக்கு ஆளாவார்கள்'' என்று அயர்ச்சியோடு கூறுகிறார் 'இப்படி' அல்லாடிய அம்மாக்களில் ஒருவரான சுகுமாரி.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன என்ற கேள்வியை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் முன் வைத்தபோது, "பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு மாணவன் விருப்பப்பட்டால் பொதுத்தேர்வை எழுதலாம் என்ற முறை உள்ளது. அங்கு ஒரு மாணவன், அவன் தாய்மொழி தவிர ஐந்தாறு அயல்நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள பள்ளியிலேயே வாய்ப்புள்ளது. அவன் எந்த துறையில் உயர்கல்வி படிக்க விரும்புகிறானோ, அந்தத் துறை சம்பந்தப்பட்ட பாடத்தை பொதுத்தேர்வில் எழுதலாம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், நம் நாட்டில் தாய்மொழி, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என்ற ஐந்து பாடங்களை மட்டும்தான் பத்து வருடங்களாக பள்ளியில் படிக்கிறான் ஒரு மாணவன். இப்படிப்பட்ட அடிப்படையில், நம் நாட்டில் பொதுத்தேர்வை விருப்பப்பட்டால் எழுதுங்கள் என்று சொல்வது சீர்குலைவைத்தான் தரும். காரணம்... நம் நாட்டில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, அரசின் உதவி என ஒவ்வொன்றுக்கும் இந்த பொதுத்தேர்வுதான் ஒரு முகவரி அட்டை. மத்திய அரசின் இம்மாதிரியான முடிவுகள் தலைமுறைகளைப் பாதிக்கும்.
பொதுவாக கல்வியில் சீரமைப்பைக் கொண்டு வரும் முடிவுகளை எடுக்க ஜனநாயக முறைப்படி பொதுவிவாதத்தில் வைத்து, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும். அந்த கமிட்டி பல முனைகளிலும் ஆராய்ந்து கொடுக்கும் பரிந்துரைகளின்படி முடிவு எடுப்பதுதான் குழப்பமில்லாத, சிக்கல் இல்லாத மாற்றத்தைக் கொடுக்கும்'' என்றவர்,
"இன்றைக்கு உயர்கல்வியான ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் தேசிய கல்வி ஆலோசக மையமான 'என்.சி.ஈ.ஆர்.டி' பரிந்துரைக்கும் பாடத்திட்டம்தான் பின்பற்றப்படுகிறது. அந்தப் பாடத்திட்டத்தின் பரிந்துரையை பெரும்பாலும் பின்பற்றுவது, சி.பி.எஸ்.இ. போர்டுதான். எனவே, அதைப் படிக்க வாய்ப்பு கிடைக்காத... ஆனால், திறமையுள்ள மெட்ரிகுலேஷன், ஸ்டேட்போர்டு மாணவர்களுக்கு இந்த உயர்கல்வி நிறுவனங்கள் வெறும் கனவாகவே முடிந்துவிடுகிறது. எனவே, அனைத்து பிரச்னைகளுக்கும் சரியான தீர்வு கிடைக்கும் வகையில் பாட திட்டங்களை சீர்படுத்தவேண்டும்'' என்று சொன்னார்.
கல்வி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் நம்பிக்கை விளக்கு. அது பிரகாசமாகவே ஒளிர வேண்டும்... குழப்பங்கள் தீர்ந்து!
|
|
|  |
0 கருத்துரைகள்:
Post a Comment